கொரோனா வைரசிலிருந்து மக்களை பாதுகாக்க விசேட செயலணி

(அப்துல்சலாம் யாசீம்)
கொரோனா வைரசிலிருந்து மக்களை பாதுகாக்க விசேட செயலணி தம் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டு செயற்பட்டு வருவதாகவும் மக்களுக்கு அவசியமான உணவுப்பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இன்று தெரிவித்தார்.
மாவட்ட வர்த்தக சங்கத்தினர் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சுயமாக முன்வந்து மக்கள் தமக்கு தேவையான பொருட்களை தமது வீடுகளில் இருந்தவாரு கொள்வனவு செய்யும் பொறிமுறை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இப்பொறிமுறை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் பரவலாக்கப்படவுள்ளது.இதனால் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த முடியும்.திருகோணமலை பொதுச்சந்தையின் செயற்பாடுகளை 9இடங்களில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
அத்துடன் பிற பிரதேசங்களில் இருந்து மாவட்டத்திற்கு வருகின்றவர்கள் தொடர்பில் அவர்களை தமது வீடுகளிலே தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இற்றைவரை இருவர் சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு வைத்துயசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவ்விருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசீலனை மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் மாவட்டத்தில் கூலி வேலை செய்பவர்கள்,அவசிய உதவிகள் செய்யப்படவேண்டியவர்கள் தொடர்பான தகவல் திரட்டப்பட்டு வருவதாகவும் தனவந்தர்களின் உதவியோடு இவர்களுக்கான அத்தியவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் கிடைக்கப்பெற்றதும் அவை பகிர்ந்தளிக்கப்படும் என்றும் மக்கள் சுகாதாரத்துறை மற்றும் அரசாங்கம் விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.