Header Ads

Breaking News
recent

அரசியல் பழி தீர்க்க வேண்டாம்! −முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்−



சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் கைதுகள் மர்மமாகவே உள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்....

சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் திடீர் கைதுகளை சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டிய விடயமாகும். இதனை வைத்து யாரும் அரசியல் பழி தீர்க்கும் கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றிவரும் சிறந்த சட்டத்தரணியாகும். இவரின் கைதினை சமூகம் கவலையுடன் பார்க்கின்றது.

மேலும் றியாஜ் பதியுதீனின் கைது ஒரு அரசியல் பழிவாங்லாகவும் இருக்கலாம். இக்கைது நடவடிக்கைகளை வைத்து அரசியல் செய்யும் தருணமில்லை என்பதை புரிந்து சகலரும் சமூக கூட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் அரசின் தீர்மானத்திற்கு எதிராக நான் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றோம்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள பேராசிரியர் கமால்தீன் தலைமையிலான புத்திஜீவிகள்  குழுவினர் நாட்டின் அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடமும் சுகாதார அமைச்சின் வைத்திய நிபுணர்களிடமும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இவ்விரு முயற்சிகளும் வெற்றியளிக்க முஸ்லிம் சமூகம் இறைவனிடம் துஆச் செய்து கொள்ளுமாறும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Powered by Blogger.