மட்டக்களப்பில் அதிகாலையில் ஏற்பட்ட சோகம்!
(திருமலை பாயிஸ்)
மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி தந்தை ஒருவர் கொலை செய்துள்ளார்.இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இரண்டு மணியளவில் தனது வீட்டு கிணற்றில் தூக்கி எறிந்ததில் பிள்ளைகள் மரணமடைந்துள்ளன.
குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் பிள்ளைகளை கொழும்பு பிரதேசத்திலுள்ள காப்பகத்தில் சேர்த்து கல்வி கற்று வந்த நிலையில் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் சேர்ப்பதற்காக இடைவிலகல் மேற்கொண்டு அழைத்து வந்திருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
பிள்ளைகளின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் ஓடி வந்து கிணற்றில் இருந்து பிள்ளைகளை மீட்டுள்ளனர். எனினும் மீட்கும் போதே இரு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து சடலங்களை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்த நாற்பது வயதுடை தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்த குழந்தைகளின் விபரம், அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தைகளின் விபரம், அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

