வடக்கில் அப்பிள் மரம் நாட்டி அறுவடை செய்யும் விவசாயி!!
(பிராந்திய செய்தியாளர் எஸ்.ரி.பிரணவன்)
குளிர் வலயங்களில் மாத்திரமல்ல வெப்ப வலயங்களிலும் அப்பிள் செய்கையை மெற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு கிளிநொச்சியை பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் அமரசிங்கம் என்ற இந்த விவசாயியே வெற்றிகரமாக பயிரிட்டுள்ளார்.
லண்டனிலிருந்து சிறு கன்றினை எடுத்து வந்து கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் தனது தோட்டத்தில் நாட்டிய அவர் சாதாரண தாவரங்கள் போலவே பராமரித்து வந்துள்ளார். குறித்த அப்பிள் மரம் கடந்த வருடம் காய்த்துள்ளது. அதனை அறுவடை செய்த அவர் தொடர்ந்தும் அதனை பராமரித்து வருகின்றார்.
தற்போது குறித்த மரம் மீண்டும் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இறக்குமதி அப்பிள்களின் சுவையை கொண்டதாகவும் அதன் அளவில் சிறியதாக காணப்படுவதாகவும் அமரசிங்கம் தெரிவிக்கின்றார். எனினும் குறித்த தாவரத்தை முறையான ஆலோசனைகளுடன் பராமரிக்கும் சந்தர்ப்பத்தில் சிறந்த பெறுபேற்றினை காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இந்த விவசாயி தனது காணியில் திராட்சை, அன்னாசி உள்ளிட்ட குளிர்வலய தாவர உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றார்.
எனினும் குறித்த செய்கையில் ஓரளவு வெற்றி கண்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், அதற்கான ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கும் இடத்தில் செய்கையில் மேலும் முன்னேற்றத்தை காண முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
1960ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதல் முதலாக அப்பிள் பயிரிடப்பட்டது நுவரேலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அப்பிள் செய்கை பின்னர் கைவிடப்பட்டது. எனினும் இப்போதும் சில பகுதிகளில் வீட்டுத்தோட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

