இந்தியாவின் 74வது சுதந்திர தினம் இன்று
நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் ஏழாவது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார்.
74வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கோலோகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, இன்று மூவர்ண தேசியக் கொடியை டெல்லி செங்கோட்டையில் ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
இதையொட்டி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மோடி அஞ்சலி செலுத்துவார்.லாகூரி கேட் வழியாக செங்கோட்டைக்கு வரும் பிரதமர் மோடிக்கு ஏழரை மணி அளவில் பேண்டு வாத்தியங்கள் முழங்க முப்படை அணிவகுப்புடன் மரியாதை செலுத்தப்படுகிறது.
21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பிரதமர் ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அழைப்பு இல்லாதவர்களுக்கு விழா அரங்கில் அனுமதி இல்லை.
டெல்லியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமானங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டையில் கமாண்டோப் படை உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர்.
மெட்டல் டிடெக்டர் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து விழா விருந்தினர்களும் முகக் கவசம் அணியும்படியும் சமூக இடைவெளியைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
