வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதல்
கேகாலை, அம்பன்பிடிய, நேம்பரியாவ வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
51 வயதுடைய வசந்த ஜயசிங்க என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த நபர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பணி புரிபவர் என அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை 2 மணியளவில் பணி நிமித்தம் உயிரிழந்த நபர் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
அதிகாலை வேளையில் மழையுடனான வானிலை காணப்பட்டுள்ள நிலையில், வீதியின் குறுக்கே திடீரென முள்ளம்பன்றி ஒன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, மோட்டார் சைக்கிளை குறித்த நபர் நிறுத்த முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
