உயிருடன் இருந்த நோயாளியை பிணவறையில் வைத்த மருத்துவர்கள் : இலங்கையில்
யாழ்ப்பாணம் தென்மராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக தவறாக வைத்தியசாலை சமூகம் முடிவெடுத்ததால் ஒரு உயிர் அநியாயமாக இழக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நெல்லியடி ராஜகிராமத்தினைச் சேர்ந்த மூடை தூக்கும் கூலித் தொழிலாளி ஒருவர் உடல் சோர்வடைந்து மயக்கம் அடைந்திருக்கின்றார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வெளிநோயாளர் பிரிவில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்து அவரை பிண அறையில் வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிணவறைக்கு சென்ற உறவினர்கள் அவருக்கு இதயத் துடிப்பு இருந்ததை அவதானித்து மீண்டும் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
இதனையடுத்து சராசரி இரண்டு மணி நேரத்தின் பின்னர் அவர் மருத்துவ நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும் அதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தினை அடுத்து பெருமளவான மக்கள் திரண்டு வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு எதிராக எதிர்ப்பினை வெளியிட்டுவருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
