தம்புள்ளை பள்ளியை அகற்ற மீண்டும் முயற்சி!!!!
தம்புள்ளை பள்ளியை அகற்ற மீண்டும் முயற்சி - ஆவணங்களை ஒப்படைக்குமாறு மாநகர ஆணையர் கடிதம் - பிரதமரை சந்திக்கிறது பள்ளி நிர்வாகம்.
தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாயலை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பள்ளியின் ஆவணங்களை உடனடியாக கையளிக்குமாறு தம்புள்ளை மாநகர ஆணையாளர் தம்புள்ளை பள்ளி நிர்வாகத்தை கடிதம் மூலம் கோரியுள்ளார்.
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. இவ்விவகாரம் வக்பு சபையின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் தொடர்பில் மாத்தளை மேயர் ஜாலிய ஓபாத கருத்து வெளியிடுகையில் “தம்புள்ளை புனித பூமி எல்லையில் அமைந்துள்ள பள்ளிவாயல் தொடர்பில் விரைவில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்,
இத்தீர்மானம் பள்ளி நிர்வாகம், அப்பகுதி பன்சலைக்கு பொறுப்பான மதகுரு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் என்போருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளப்படும்.
