கொரோனா தொற்று அச்சநிலைமையின் பின்னர் முதற்தடவையாக சுற்றுலாப்பயணிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளனர்.
கொரோனா தொற்று அச்சநிலைமையின் பின்னர் முதற்தடவையாக யுக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளனர்.
இதன்படி 200க்கும் மேற்பட்ட யுக்ரேனிய பிரஜைகள் மத்தள விமான நிலையமூடாக இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்து விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி சுமார் 9 மாதங்களின் பின்னர் சுற்றுலாப்பயணிகளை கருத்திற்கொண்டு கடந்த 26 ஆம் திகதி விமான நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் புதியவகை வைரஸ் தொற்று காரணமாக குறித்த செயற்பாடு இன்று வரை தற்காலிகமாக பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த விசேட திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் சுற்றுலாப்பயணிகளை கருத்திற் கொண்டு நாட்டின் விமான நிலையங்களின் வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
