உடற்கல்வி ஆசிரியர்கள் தமது ஆசிரியர் பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள முடியும் - கடற்றொழில் அமைச்சர்
புதிதாக நியமனம் பெற்ற யாழ் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் தமது ஆசிரியர் பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துறைசார் அமைச்சுடன் பேசி இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சிகளை யாழ் மாவட்டத்திலுள்ள கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலேயே தமக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆசிரியர் நியமனத்தில் புதிதாக உள்வாங்கப்பட்ட யாழ் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் இன்றையதினம் அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு நடைபெற்ற சந்திப்பின்போது கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த ஆசிரியர்கள் கடந்த ஆண்டு தமக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் தற்போது தமக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை தாம் மேற்கொண்டுவரும் நிலையில் தென்னிலங்கையிலுள்ள கலாசாலைக்கு பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இதற்கான பயிற்சி நிலையமாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை இருக்கின்றபோது தென்னிலங்கையில் தமக்கு பயிற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கொரோனா தொற்று அபாயம் காணப்படும் நிலையில் தங்களால் அங்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியதுடன் தமக்கான பயிற்சிகளை யாழ்ப்பாத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கோரியிருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு தருவதாகவும் அதற்கான பேச்சுக்களை துறைசார் அமைச்சுடன் பேசி இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
