வாஷிங்டனில் 15 நாட்கள் அவசரநிலை பிரகடனம்!!!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் அந்நாட்டு பாராளுமன்றத்தின் நேற்று நடைபெற்றது. அப்போது, அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறையின் போது, டிரம்ப் ஆதரவாளர்கள் 4 பேர் மற்றும் ஒரு போலீஸ் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் அதிபர் தேர்தல் வெற்றியாளராக பைடனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள் அதிபரை தேர்வு செய்வதற்கான தங்களது வாக்குகளை செலுத்தி அதை சீலிட்ட கவரில் அனுப்பி வைத்திருந்தனர். அந்த சீலிட்ட கவரை பிரித்து மாகாண சபை உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணினர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று அதிபராக தேர்வானார். அவர் வெற்றி பெற்றதாக துணை அதிபர் மைக் பென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
டொனால்டு டிரம்ப் 232 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டது போல 20-ந் தேதி ஜோபைடன் பதவி ஏற்கும் போதும் அவர்கள் வாஷிங்டனில் கலவரத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக வாஷிங்டனில் 15 நாட்களுக்கு பொது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை வாஷிங்டன் மேயர் முரியல் பவுசல் வெளியிட்டுள்ளார். ஜோபைடன் பதவி ஏற்ற மறுநாள் வரை இந்த அவசர சட்டம் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
