கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் கைது!!!

(எப்.முபாரக்)
வனப் பகுதியை அழித்து வேறு தரப்பினருக்கு காணியை பகிர்ந்தளித்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை, நேற்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய், ஜயந்திபுர வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வன பரிபாலன அதிகாரிகளிடம் எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல், வனப்பகுதி அழித்து, அந்தக் காணிகளை பகிர்ந்தளித்துள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாக விசாரித்த வன இலாகா அதிகாரிகளின் கடமைக்கும் அவர் இடையூறு விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்த வான்எல பொலிஸார், மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.