திருகோணமலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை என்.சி.வீதி மற்றும் மத்திய வீதி,மூன்றாம் குறுக்குத்தெரு போன்ற பிரதேசங்களில் பெறப்பட்ட பிசிஆர் அறிக்கையின்படி 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் படி இன்று (17) அதிகாலை பிசிஆர் பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனடிப்படையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 243 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேருக்கும் திருகோணமலையைச் சேர்ந்த 11 பேருக்குமே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வைரஸ் தொற்று உறுதியான தொற்றாளர்கள் அனைவரையும் கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.
இதேவேளை கடந்த 15ஆம் திகதி மூடப்பட்டிருந்த கடைகள் இன்று திறக்கப்பட்டிருந்த போதும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.