திருகோணமலை மாவட்டத்தில் பலத்த காற்றினால் 18 வீடுகள் சேதம்-73 பேர் பாதிப்பு...

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.குணதாஸ் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும்,அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் 5 வீடுகளும்,சேருவில பிரதேசததில் 8 வீடுகளும், குச்சவெளி பிரதேசத்தில் மூன்று வீடுகளும் தம்பலகாமம் பிரதேசத்தில் இரண்டு வீடுகளும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாரிய மரங்கள் வீதிகளில் விழுந்துள்ளதுடன், சில இடங்களில் வீதிப் போக்குவரத்து தடைகளும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
