மட்டக்களப்பில் இடம்பெற்ற உலக மற்றும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காக வேண்டிய சர்வமத பிரார்த்தனைகள்...

தற்போது உலகை உலுக்கிவரும் கொவிட் 19 தொற்றுப் பரம்பல் நீங்கி சுபீட்சமானதொரு வாழ்வு மலர உலக மக்களின் நன்மையும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் வேண்டி சர்வமதப் பிரார்த்தனைகள் நாடு பூராகவும் உள்ள மதஸ்தலங்களில் இன்று 08.05.2021 ஆந் திகதி சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு இடம்பெற்றது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களது எண்ணத்தில் உதித்த சிந்தனைக்கு அமைவாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக நாடு பூராகவுமுள்ள சர்வமத ஸ்தலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாகவே இவ் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இதன் பிரகாரம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கையில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட மஹாம்ருத்யுஞ்ஜய யாக வழிபாட்டினை ஆலய அறங்காவலர் மற்றும் கிரியைகளை நிறைவேற்றும் சிவாசாரியார்களோடு மட்டுப்படுத்தி, விளக்கேற்றி மானசீகமாகப் பிரார்த்தனையை நிறைவேற்றுமாறு பணித்திருந்தமைக்கு அமைவாக மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட யாக பூசையினைத் தொடர்ந்து மூல மூர்த்திக்கு விசேட பூசை இடம்பெற்றது.
அதே வேளை ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்ற விசேட யாக பூசையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் மற்றும் ஆலய நிருவாக சபையினரும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதே வேளை மாவட்டத்திலுள்ள பௌத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதஸ்தலங்களிலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


