தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு மேலதிகமாக தமிழ் தேசிய கட்சிகள் அனுப்பி வைத்திருந்த கடிதங்களால் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை தீர்ப்பதற்காக குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கும், பங்காளிக்கட்சிகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி விரும்பாவிட்டாலும், தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளில் தமிழீழ விடுதலை இயக்கம் முன்னின்று செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.