அவசரகாலச்சட்டம் நீக்கம்!
ஆர்.சனத்
நாட்டில் கடந்த ஐந்து நாட்களாக அமுலிலிருந்த அவசரகாலச்சட்டம் இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளது. இதற்கான அரச இதழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ளது.
அவசரகாலச்சட்டத்தை நீடித்துக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியம். எனினும், நாடாளுமன்றத்தில் அரசுக்கான ஆதரவு ஆட்டம் கண்டுள்ள நிலையிலேயே, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி, தொடர் மின்வெட்டு மற்றும் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் அரசுக்கெதிராக நாடு தழுவிய ரீதியில் தன்னெழுச்சிப் போராட்டங்கள் வெடித்துள்ளன. மறுபுறத்தில் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும். அரசு பதவி விலக வேண்டுமென்ற கோஷங்களும் எட்டுத் திக்கிலும் ஒலிக்கின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த முடிவை ஜனாதிபதி மீளப்பெற வேண்டுமென பிரதான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. சிவில் அமைப்புகளும் அழுத்தம் கொடுத்தன. அவசரகாலச்சட்டத்துக்கெதிராகவே வாக்களிக்கப்படுமெனவும் அறிவித்திருந்தன.
இந்நிலையிலேயே அவசரகாலச் சட்டத்தை நீக்கும் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
