காணாமல் போன அட்டுலுகம சிறுமி சடலமாக மீட்பு...
பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலம் பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CCTV கமராக்கள் பொருத்தப்பட்டும் அவை செயலிழந்துள்ள வீடொன்றில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இருந்தே
குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் பாணந்துறை அட்டுலுகமஅல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாத்திமா ஆயிஷா (9 வயது) என்ற மாணவியே உயிரிழந்ததோடு, இவர் நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள கடைக்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்றிருந்தார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் பிரதேச மக்கள் சிறுமியை தேடியுள்ளதோடு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
