சீர்குலைந்த நாட்டின் பொருளாதாரம் : நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் மக்கள் : சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 64 பேர் திருமலையில் கைது...
ரவ்பீக் பாயிஸ், அப்துல் சலாம் யாசீம்
நாட்டில் சீர்குலைந்த பொருளாதாரத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் நாட்டைவிட்டு பெரும்பாலான மக்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் (15) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 64 பேர் திருகோணமலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 64 சந்தேகநபர்களும் திருகோணமலை மூதூர் இலங்கை துறைமுகத்துவாரம் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 11 பெண்கள், 3 சிறுவர்கள் அடங்களாக மொத்தம் 64 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்கள் திருகோணமலையின் இலிங்க நகர், நகர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் ஒருவர் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர் ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




