கொரோனா வைரஸ் தாக்கம் : இலங்கை அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!
சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர், வைத்தியர் சுதத் சமரவீரவை மேற்கோள் காட்டி, சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் இன்று முதல் இரண்டு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
இதன்படி, மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் தனியார் பல்கலைக்கழகம் மற்றும் வெலிக்கந்தையில் அமைந்துள்ள கந்தகாடு, சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையம் ஆகியவை தனிமைப்படுத்தல் மையங்களாக பயன்படுத்தப்பட உள்ளன.
இதேவேளை,சீனாவில் தனிமைப்படுத்தல் மையமாக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 10 பேர் பலியாகியிருந்ததுடன், காணாமல் போயுள்ள 23 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவம் சீனாவின் தெற்கு மாகாணமான, ஃபூஜியானில் (Fujian) நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.
சீனாவில் கொரோனா தாக்கம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வூஹான் பிராந்தியத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்து 600 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Max Tamil
