Header Ads

Breaking News
recent

கொரோனா வைரஸ்: இலங்கையில் சீனர்கள் ஏன் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை?

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் சூழலில், சீனாவிலிருந்து வருகைத் தரும் சீன பிரஜைகள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படாமை குறித்து இலங்கையில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

தென்கொரியா, இரான் மற்றும் இத்தாலி ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வருகைத் தரும் பயணிகள் மட்டுமே இலங்கையில் 14 நாட்கள் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நிலையங்களுக்கு கடந்த காலங்களில் அனுப்பப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் இந்த கேள்வி எழுந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெளிவூட்டல்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலம் முதல் இலங்கை சுகாதார தரப்பினர், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்களை எட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


சுகாதார பிரிவில் அபாயத்தை ஆராயும் நடைமுறையொன்று உள்ளதாகவும், அதன்பிரகாரமே தமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடைமுறையின் பிரகாரம், இந்த வைரஸ் தொற்று உலகில் எவ்வாறான நிலையில் காணப்படுகின்றது எனவும், அதன் முன்னேற்றம் தொடர்பிலும் ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வைரஸ் தொற்று காணப்படுகின்ற நாடுகளுக்கும், இலங்கைக்குமான தொடர்புகள் குறித்தும் சுகாதார அபாயத்தை ஆராயும் நடைமுறையின் கீழ் அவதானிக்கப்படும் என டாக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

இதன்பிரகாரம், சீனாவை முழுமையாக ஆராயும் போது இறுதியாக 20ற்கும் குறைவான நோயாளர்களே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சீனா, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஆரம்பத்ததிலிருந்து மிக வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.