கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டமையால் முன்பள்ளி ஆசிரியர்கள் நிர்க்கதி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முன்பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், கொடுப்பனவுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால், தாம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கடமையாற்றி வரும் தருணத்தில், தற்போதைய கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் தொடர்பான அசாதாரண சூழ்நிலை காரணமாக எந்த ஒரு முன்பள்ளியும் இயங்காமலுள்ளன.
தொடர் விடுமுறையால் பெற்றோர்களுக்கூடாக கிடைக்கும் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாண சபையால் வழங்கப்படும் நான்காயிரம் ரூபாய், ஜனவரி மாதத்திலிருந்து ஆசிரியர்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை என்று, இந்தக் கொடுப்பனவு இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமை தொடருமாயின் தாம் பாரிய இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எனவே தமது அவல நிலையைக் கருத்திற்கொண்டு, முன்பள்ளிக்குப் பொறுப்பானவர்கள் நடவடிக்கைகள் நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மாகாண சபை கொடுப்பனவில் உள்வாங்கப்படாத முன்பள்ளி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் முன்பள்ளி ஆசிரியர்கள் உரிய உயரதரிகாளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.