நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் முதலாம் கட்ட நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் –கல்வி அமைச்சு அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 13 ஆம் திகதி தொடக்கம் மூடப்பட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கல்வி, அமைச்சர் டலஸ் அழகபெருமாவின் வழிகாட்டுதலின் பிரகாரம் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி இரண்டாவது தவணையை நான்கு கட்டங்களில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் கட்டத்தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வரவழைக்கப்படுவதில்லை என்பதோடு அனைத்து அரசுப் பாடசாலைகளிலும் அதிபர்கள், துணை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளனர்.
நாளை முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை தொடங்கும் இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, பாடசாலையில் துப்புரவு செய்தல், கிருமி நீக்கம், கைகளை சுத்தப்படுத்தல் வசதி உள்ளிட்ட சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்ட பின்னர். கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறும் விதம் குறித்து முன்கூட்டிய திட்டமிடல் செயற்பாடு அதிபர்கள், கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு முறைகள் மற்றும் அறிவுரைகள் தற்போது அனைத்து மாகாண அதிகாரிகள் ஊடாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூலை மாதம் 6 ஆம் தேதி முன்னெடுக்கப்படும் போது 13, 11 மற்றும் 5 ஆம் தரங்களில் உள்ள மாணவர்கள் மாத்திரமே இதன்போது அழைக்கப்படவுள்ளனர்.
பாடசாலையின் மூன்றாம் கட்டம் ஜூலை 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்ப்பட்டு 12 மற்றும் 10 ஆம் தர மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படவுள்ளனர்.
நான்காவது கட்டத்தில், 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்காக பாடசாலைகள் ஜூலை 27 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு . 1 மற்றும் 2 ஆம் தரங்களில் உள்ள மாணவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதோடு, அதில் கூறப்பட்டவாறு அனைத்து பாடசாலைத் தலைவர்களும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களின் பிரகாரம் பிள்ளைகளின் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.