தலைக்கவசம் அணிந்தே பள்ளி வாயலுக்கு செல்ல வேண்டும் : பொலிசார் எச்சரிக்கை !!
பள்ளிவாயலுக்கு வணக்க வழிபாடுகளுக்கு வருகை தருவோர் வெள்ளிக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் தலைக்கவசம் அணிந்து வர வேண்டுமென்ற அறிவுறுத்தலை பள்ளிவாயல்களூடாக விடுக்குமாறு கோரி வாழைச்சேனைப்பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஒப்பமிட்டு அனைத்து பள்ளிவாயல்களுக்கும் வேண்டுகோள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இதில் கோரப்பட்டுள்ளதாவது, பள்ளிவாயல்களுக்கு வருவோர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வருவதுடன், நாட்டின் போக்குவரத்து சட்டங்களைப்பேணி நடக்க வேண்டுமென்பதுடன், மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேண்டுகோளை மதித்து நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு போக்குவரத்து விதிகளைப்பேணி நடப்போம். சட்டத்தை மீறுவோர் முஸ்லிம்கள், முஸ்லிம் பிரதேசங்களில் போக்குவரத்து விதிகள் மீறப்படுகின்றன என காலாகாலமாக எம்மீது சுமத்தப்படும் வீண்பழிகளிலிருந்தும் அவப்பெயர்களிலிருந்தும் எம்மையும் சமூகத்தையும் பாதுகாப்போம்.
குறித்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டுள்ளதால், இதன் பின்னர் எமது பிரதேசங்களில் கடுமையான சட்டநடைமுறைகள் அமுல்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளமை தெட்டத்தெளிவாகின்றது.
