வீதி ஒழுங்கை மீறும் வாகன சாரதிகளுக்கு 2000 ஆயிரம் அபராதம்
கொழும்பு நகரில் வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் ஓட்டுனர்களுக்கு 2000 ரூபா தண்டப்பணம் விதிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிக வாகன நெரிசலுக்கு தீர்வாக ஶ்ரீஜயவர்தன புர மாவத்த, பேஸ்லைன், ஹய்லெவல் மற்றும் காலி வீதி ஆகியவற்றை நோக்காக கொண்டு இவ்வாறு வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வீதி ஒழுங்கை சட்டத்திற்கு எதிரான 14 குற்றங்களுக்காக இவ்வாறு 2000 ரூபா தண்டப்பணம் திங்கட்கிழமை முதல் கட்டாயமக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் பஸ், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை விஷேட ஒழுங்கையின் ஊடாக பயணிப்பது கட்டாயமாகும்.
ட்ரோன் கெமரா மற்றும் சிசிரிவி காணொளிகள் மூலம் போக்குவரத்து நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாராந்த நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இந்த சட்டம் தொடர்பில் கடுமையாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
