கைவிடப்பட்ட காணிகளில் தொல்பொருள் சான்றுகள் : திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவின் திரியாய் ஆத்திக்காடு பிரதேசத்தில் மக்கள் பல வருடகாலமாக பயிர் செய்யாது கைவிடப்பட்ட காணிகளை சுத்தம் செய்யும் போது தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அவற்றிற்கு சேதமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனை தொடர்ந்து அரசாங்க அதிபர் அதிகாரிகள் சகிதம் குறித்த பிரதேசத்திற்கு இன்று நிலவரங்களை அவதானிக்க களவிஜயம் ஒன்றை மேற்கோண்டார்.
இதன் போது குறித்த பிரதேசத்தில் காணி உரிமங்களை உடைய பொதுமக்கள் தமக்கு இம்முறை பயிர்செய்ய அனுமதியை வழங்குமாறு அரசாங்க அதிபரிடம் வேண்டிக்கொண்டனர்.
இப்பிரதேசத்தில் சில இடங்களில் தொல்பொருள் சான்று கிடைக்கப்பெற்றுள்ளது.எனவே தொல்பொருள் திணைக்களம் சான்றுகளோடு தொடர்புபட்ட இடங்களை அடையாளப்படுத்தி வகைப்படுத்த வேண்டும்.அதற்கு ஒருவாரம் கால அவகாசத்தை தொல்பொருள் திணைக்களம் கோரியுள்ளது.இச்செயற்பாடு முடிவுற்றதும் குறித்த காணிகளில் உழவு நடவடிக்கைகளை மேற்கொண்டு பயிர்செய்ய உரிய காணிவுடமையாளர்களுக்கு பிரதேச செயலகம் மூலம் அறிவுறுத்தப்படும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
தொல்பொருள் சான்றுகள் மிக முக்கியமானது.அவற்றை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.இது தொடர்பில் அனைவரும் அவதானத்துடன் செயற்படுவது இன்றியமையாயதது என்று இதன்போது அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இக் களவிஜயத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர் திரு. தனேஸ்வரன்,திணைக்கள தலைவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


