Header Ads

Breaking News
recent

ஜனாஸாக்கள் எரிப்பதை தடுக்க, அத்தனை முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளோம் : அமைச்சர் அலிசப்ரி


இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும்,முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்கான, அத்தனை முயற்சிகளையும் தாம் முன்னெடுத்திருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி  தெரிவித்தார்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது, தவறு என்பதை நான் இதற்கு முன்னரும் உறுதியாக குறிப்பிட்டிருந்திதேன். 

அல்ஜசீரா சர்வதேச ஊடகமும இதனை ஒளிபரப்பியிருந்தது. 

இதனால் நான் கடும்போக்கு பௌத்த குருமார்களிடம் எதிர்ப்பை சம்பாதித்தேன். அவர்களுக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. அன்றும், இன்றும் எனது நிலைப்பாடு ஒன்றானதே. ஆம், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தவிருங்கள் என்பதே எனது வாதமாகும். இதுபற்றி ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் உரையாடியுள்ளேன்.

ஜனாஸாக்களை எரிப்பதை தடுக்குமாறு, நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. நாங்களும் மறுபறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

சுகாதாரத் தரப்பினரின் முழு சம்மதத்துடன், கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதால், பாதிப்பு இல்லை என்ற பொது நிலைப்பாட்டுக்கு முதலில் வந்து, அதன் பின்னர் கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான, சட்ட ரீதியான அனுமதியைப் பெற்றுக்கொள்வதே எமது நிலைப்பாடாகும்.

இந்த வழிமுறையின் மூலம், ஜனாஸாக்களை எரிப்பது தவிர்க்கப்படும். எந்தத் தரப்பும் எதிர்ப்பும் வெளியிடாத நிலையும் உருவாகும்.

இதனை தூரநோக்கோடு அணுகுவதே, சிறந்த உபாயமாகும்.

சுகாதாரத் தரப்பினரும், இதுபற்றிய மீளாய்வு ஒன்றை விரைவில் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் இந்த நேரத்தில் எந்தத் தரப்பினர் மீது பகிரங்கமாக சமூகத் தளங்களில் குற்றம் சுமத்துவதை கைவிட்டு, புத்தி சாதூர்யமாக காரியங்களைச் செய்ய வேண்டும். 

நாம் எந்தத் தரப்பும் மீது குற்றம் சுமத்தினால், அது எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது சிறந்தது எனவும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.