Header Ads

Breaking News
recent

நாட்டு மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் மற்றுமோர் தகவல் : சுகாதார சேவைகள் பணிப்பாளர்


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளருக்கு தொற்றியுள்ள வைரஸ் மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் கொரோனா பரவல் நிலைமைகள் தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

குறித்த நபர் தம்புள்ளை சந்தைக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் குறித்த பகுதியில் பல பொதுமக்களோடு தொடர்பை பேணி இருந்திருக்கின்றார்.

ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையில், அவருக்கு தொற்றியிருக்கும் கொரோனா மிகவும் வீரியமானதாக இருக்கின்றது.

எனவே அவரில் இருந்து பலருக்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இதனால் அவரோடு தொடர்பிலே இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் இருக்கும் அனைத்து மக்களும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களோடு தொடர்புகளை மேற்கொண்டிருந்தால், உடனடியாக உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பினை மேற்கொண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுவதன் மூலம் வடக்கு மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றுறுதியான நபருடன் தொடர்புடைய 65 பேரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேரும் என மொத்தமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.