வெளியாருக்குச் சொந்தமான அனைத்து வர்த்தக நிலையங்களையும் மறு அறிவித்தல்வரை மூடுமாறு அறிவிப்பு !
மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேசத்தில் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளங்காணப்பட்டதையடுத்து ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள வெளியாருக்குச் சொந்தமான அனைத்து வர்த்தக நிலையங்களையும் மறுஅறிவித்தல்வரை உடனடியாக மூடிவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப்பிரதேசத்திலும் கொரோனா தொற்று பரவுவதைத்தடுக்கும் நோக்குடன் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப்பிரதேச கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் இதுதொடர்பான பல தீர்மனங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நகர சபையின் தவிசாளர் ஐ. அப்துல் வாசித், பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் மற்றும் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி வசிம் சாபிறா ஆகியோரின் கூட்டுத்தலைமையில் நகர சபை மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
அத்துடன் ஏறாவூர்ப் பிரதேச பொதுமக்கள் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி மற்றும் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆகியோரின் அனுமதியின்றி எக்காரணம் கொண்டும் வெளிப்பிரதேசங்களுக்குச் செல்வதையும் அல்லது வெளியூர் நபர்கள் ஏறாவூருக்குள் வருவதையும் மறுஅறிவித்தல்வரை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஏறாவூர்ப் பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தினமும் பயணம்செய்யாது பிரதேச சுகாதார வைத்தியதிகாரி மற்றும் பொலிஸாரின் அனுமதியுடன் தங்கியிருந்து தமது வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ளமுடியுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களைக் கண்காணிப்பதற்கென பிரதேசத்தின் எல்லைப்புறத்தில் பொலிஸ் சாவடிகள் அமைக்கப்படுவதுடன் பொலிஸார் விசேட கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் வணக்கஸ்தலங்கள், திருமணம் உள்ளிட்ட விசேட நிகழ்வுகள் மற்றும் மரண வீடுகளில் மக்கள் ஒன்றுகூடுவதை பொலிஸாரின் கண்காணிப்புடன் கட்டுப்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளதுடன் மீறுவோருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
