பயணக்கட்டுப்பாட்டினால் இன்றும் ஊராடங்கு போல் காட்சியளித்த முல்லைத்தீவு!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரங்கள் அனைத்தும் நேற்றுப்போல இன்றும்(15) வெறிச்சோடிக்காணப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினை முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சரியாக கடைப்பிடித்துள்ளமையினை இன்றும் பரவலாக அவதானிக்க முடிகிறது.
மாவட்டத்திலுள்ள வணிகநிலையங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் அற்ற நிலையில் வீதிகளில் படையினரும், பொலீசாரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
பயணக்கட்டுப்பாடு என அரசாங்கம் அறிவித்துள்ள போதும் முற்றுமுழுதாக மக்கள் கொரோனா அச்சம் காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளார்கள்.
ஊரடங்கு காலத்தில் இருப்பதை போன்றே மக்களின் நடமாட்டம் முற்றுமுழுமையாக இல்லாதநிலையில் அரசாங்கத்தின் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றியுள்ளமையினை காணக்கூடியதாகவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடச்சியாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினால் மக்கள் கூட்டமாக கூடுவதனை தவிர்த்து வந்துள்ளதுடன் ஆலய திருவிழாக்கள் சில நிறுத்தப்பட்டுள்ளன.
மக்களுக்கு தேவையான அத்தியசியமான மருத்துவமனை மற்றும் தனியார் மருந்தகங்கள் இயங்கிவருகின்ற நிலையில் சுகாதார பாதுகாப்பு தொடர்பான அறிவித்தல்களை அந்தந்த பிரதேச பொலீசார் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

