பயணத்தடை மேலும் நீடிப்பு : பொதுமுடக்கமொன்றுக்கு செல்லவும் அரசு ஆலோசனை...

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரடைந்துவரும் சூழ்நிலையில் தற்போது அமுலாகிவரும் பயணத்தடையை மேலும் சில வாரங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இன்றைய தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ள பயணத்தடை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தற்போது தினசரி அமுலாகும் பயணத்தடை நேரத்திலும் மாற்றம் செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் நாட்டிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதை மேலும் ஒரு மாதத்திற்கு ஒத்துவைக்கப்படலாம் என அறிய முடிகிறதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை மே 28 ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பதா என்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (22) தெரிவித்தார்.
குறுகிய பயணத்தடைமூலம் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது என்பதால், குறைந்தபட்சம் 14 நாட்களுக்காவது முழு நாட்டையும் முடக்குமாறு மருத்துவ சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.