Header Ads

Breaking News
recent

ரிஷாத்தின் மனைவி உட்பட மூவரையும் 72 மணி நேர தடுப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை!


முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய ரிஷாத் பதியுதீனின் மனைவி , மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பில் சுமார் 20 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் குறித்த சிறுமி துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோன்று குறித்த சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்து இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தியதாகவும், மனித வர்த்தகம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த குற்றங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் மனைவியான 46 வயதுடைய ஷியாப்தீன் ஆயிஷாவும் அவரது தந்தையான 70 வயதுடைய மொஹம்மட் ஷியாப்தீன் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்து இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வீட்டு வேலைக்கு அமர்த்தியமை தொடர்பில் அவரை கொழும்புக்கு அழைத்து வந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த தரகரான பொன்னையா பண்டாரம் சங்கர் என்ற 64 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்படவுள்ளனர் என்றார்.
Powered by Blogger.