Header Ads

Breaking News
recent

இறக்குமதி வரிகளை நீக்கினாலும், பால்மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை : பால்மாவினால், 200 ரூபா நட்டம்...



அரசாங்கம் இறக்குமதி வரிகளை நீக்கினாலும், பால்மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரிகள் நீக்கப்பட்டுள்ளமையினால், ஒரு கிலோ பால்மாவிற்கான நட்டத்தை 100 ரூபா வரையில் மாத்திரமே ஈடுசெய்ய முடியும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், ஒரு கிலோ பால்மாவினால், 200 ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமைக்கு மத்தியில், ஒரு கிலோவுக்கு ஆகக் குறைந்தது 200 ரூபா விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடுகளில் இருந்து பால்மாவை இறக்குமதி செய்யும்போது, கடந்த 3 மாதங்களில் பெற்றுக்கொண்ட பால்மாவுக்கான பணத்தை வழங்க வேண்டும்.

அதனை செலுத்துவதற்கான நிலைமை தற்போது இல்லை.

இந்த நிலையில், 200 ரூபா விலை அதிகரிப்பு அவசியமாகும்.

எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில், இந்த நிலைமையை ஏற்படுத்தினால், அதன் பின்னர், உலக சந்தையின் விலை மற்றும் டொலரின் பெறுமதி என்பனவற்றின் அடிப்படையில் விலை குறைப்பை மேற்கொள்ள முடியும் என பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.