ஆரம்ப சுகாதார சேவை நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது...
திருகோணமலை-குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தென்னவன்மரவடியில் ஆரம்ப சுகாதார சேவை நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரளவினால் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.
வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடையே காணப்படும் எல்லைக்கிராமமான இந்த கிராம மக்கள் யுத்த காலத்தின் போது தமது சொந்த காணிகளை விட்டு சென்று வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றப்பட்டனர்.
ஆனாலும் தென்னவன்மரவடி மக்கள் வைத்தியசாலை இல்லாமையினால் இரண்டு உயிர்களை பலி கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடும் இதேவேளை மிகவும் பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தென்னமரவடி புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் IMHO நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு பொதுமக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அதி வணக்கத்துக்குரிய ஆண்டகை நோயல் இம்மானுவேல் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.