Header Ads

Breaking News
recent

நாகினி சீரியலில் கதாபாத்திரங்களை சந்திக்க படகு மூலம் இந்தியா செல்ல வீட்டை விட்டு ஓடிய மூன்று சிறுமிகள் : இலங்கையில்...



கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியலில் இடம்பெறும் ஷிவன்யா மற்றும் ஷேஷா ஆகிய இரு கதாபாத்திரங்களையும் சந்திப்பதற்காக படகு மூலம் இந்தியா செல்லும் நோக்கத்துடன், வீட்டை விட்டு ஓடிய மூன்று சிறுமிகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் இன்று (31) பிற்பகல் கண்டுபிடித்துள்ளனர்.

குழந்தைகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தேடுதல் மேற்கொண்ட பொலிசார், ஹொரவ்பொத்தானை, பஹல குபுகொல்லேவ பிரதேசத்தில் வைத்து சிறுமிகளை கண்டுபிடித்தனர்.

இடிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 8, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுமிகளே வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இன்று (31) அதிகாலை 4.30 மணியளவில் பெற்றோருக்கு தெரியாமல் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவிலுள்ள சீரியல் நடிகைகளை சந்திப்பதெனில், இந்தியாவிற்கு அருகிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு முதலில் செல்ல வேண்டுமென சிறுமிகள் திட்டமிட்டனர். இந்தியாவிற்கு அருகிலுள்ள இடம் யாழ்ப்பாணம் என பாடசாலை நண்பிகள் அவர்களிற்கு தெரிவித்திருந்தனர்.

யாழ்ப்பாணம் சென்ற பின்னர், படகொன்றை பிடித்து இந்தியா செல்லலாமென அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக சிறிதுசிறிதாக வீட்டில் பணமும் சேகரித்து வைத்திருந்துள்ளனர்.

வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முள்ளிப்பொத்தானை சந்திக்கு வந்த சிறுமிகள், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் அதிகாலை 5:55 மணியளவில் ஏறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெபிதிகொல்லாவிற்கு வந்த சிறுமிகள், கெபிதிகொல்லாவவிலிருந்து கஹட்டகஸ்திகிலிய செல்லும் பேருந்தில் ஏறி, கஹட்டகஸ்திகிலியவிற்கு வந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் தமது பயணப்பாதை தவறி விட்டதை உணர்ந்த சிறுமிகள், மீண்டும் ஹொரவ்பொத்தானை நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறி ஹொரவ்பொத்தானை நோக்கிச் சென்றுள்ளனர்.

பிள்ளைகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெற்றோர்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் பெற்றோர் வேறு பகுதிகளிற்கு அவர்களை தேடி சென்றுள்ளதால், அவர்கள் வரும் வரை பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.