Header Ads

Breaking News
recent

மனித உரிமை மீறலுக்கு ஆதரவாக மாணவர்களை தூண்டுவது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல : குரல்கள் இயக்கம் கண்டனம்....



ரவ்பீக் பாயிஸ் 

ஆசிரியைக்கு பாடசாலையில் கடமை பொறுப்பேற்க  அனுமதிக்காதமை நீதிமன்றத்தையும், நீதிமன்ற யாப்பையும் அவமதிக்கும் செயல் என
குரல்கள் இயக்கத்தின் தவிசாளர் சட்டத்தரனி றாஸி முஹம்மட் ஜாபிர் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கல்லூரியில் இடம்பெற்ற அசம்பாவிதம் இரண்டு சமூகங்களுக்கு இடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் செயல் எனவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பொலிஸார் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையை பொறுப்பேற்க  சென்ற ஆசிரியரை தாக்கிய குண்டர்களை சிசிடி காணொளி காட்சிகளை பெற்று சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் அப்பாவி மாணவிகளை ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மனித உரிமைகளின் பால் வழி நடத்தாமல் மனித உரிமை மீறலுக்கு ஆதரவாக மாணவர்களை ஆசிரியர் குழாம் தூண்டுவது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு தொடர்பிலான வழக்கு இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட ஆசிரியை தன்னை தாக்குவதற்கு முற்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய பெயர் விபரங்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குரல்கள் இயக்கம் திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் நேற்றையதினம் இடம்பெற்ற சம்பவத்தினை திரிபு படுத்தி பக்கச்சார்புடன் சில ஊடகங்கள் இன நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டு தமது துவேஷத்தை வெளிக்காட்டியது வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் அவ்வாறு செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்
குரல்கள் இயக்கத்தின் சட்டத்துரைப் பெறுப்பாளர் முகைமின் காலித் தெரிவித்தார் 

இன்றைய ஊடக சந்திப்பின்போது குரல்கள் இயக்கத்தின் சட்டத்துரைப் பெறுப்பாளர் முகைமின் காலித் மற்றும் சட்டத்தரனி சாதிர் முஹம்மட் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.