Header Ads

Breaking News
recent

சம்மாந்துறையில் சமையல் எரிவாயு வழங்கப்பட்டது : பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (22) காலை சமையல் எரிவாயு வழங்கப்பட்டது. பெரும் திரளாக மக்கள் குறித்து இடத்திற்கு வந்து சேர்ந்தனர். சமையல் எரிவாயு பெற்றுக் கொள்ள வந்தவர்களை வரிசைப்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் கடமையில் ஈடுபட்டனர்.

சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும் நின்று கொண்டிருந்தனர்.

இவ்வாறாயினும் பலருக்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும், சமையல் எரிவாயு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் சமையல் எரிவாயு லொறியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் லொறியில் சமையல் எரிவாயு உள்ளதாக மக்கள் சத்தமிட்டனர்.
இதனால், சமையல் எரிவாயு ஏற்றி வந்த லொறியை போகவிடாது தடுக்கும் முயற்சியில் பொது மக்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொலிஸாரின் எச்சரிக்கையை அடுத்து பொது மக்கள் அந்த முயற்சியை கைவிட்டனர்.

இதே வேளை, சமையல் எரிவாயு நிரப்பிய சிலிண்டர்கள் இல்லை என்று சொல்லப்பட்ட பின்நோக்கிச் சென்ற லொறி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் சென்றது.

இதனால், பொது மக்கள் பொலிஸ் நிலையத்தின் நுளைவாயிலை முற்றுகையிட்டனர். பின்னர் பொலிஸார் பொது மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பலரும் இன்று சமையல் எரிவாயு பெற்றுக் கொள்வதற்கு நீண்ட நேரமாக காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு சென்றனர்.

இதே வேளை, சமையல் எரிவாயு பெற்றுக் கொள்வதற்கு வருகை தந்தவர்களில் சிலர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.





Powered by Blogger.