Header Ads

Breaking News
recent

வெளிநாட்டு இராஜதந்திரிகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அதிருப்தி : காலிமுகத்திடலில் சம்பவம் தொடர்பில் பகிரங்கமாக கேள்வி...



புதிய ஜனாதிபதி அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை 23 ஆம் திகதி மாலை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் சம்பந்தமாக தமது அதிருப்திகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இராஜதந்திரிகள் ஒவ்வொருவரையும் பார்த்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியதோடு பகிரங்கமாகவே அதிருப்திகளையும் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, காலிமுகத்திடல் போராட்டம் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை இதன்போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர், போராட்டக்காரர்கள் உங்கள் நாடுகளில் உங்கள் ஜனாதிபதியின் அலுவலகத்தை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்து கொண்டு, அங்கிருந்து வெளியேற மறுத்தால் உங்கள் அரசுகள் அதை அனுமதிக்குமா? உரிய அதிகாரிகளுடன் உண்மை நிலையை உறுதிப்படுத்தாமல் வெறுமனே சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு என்னை கண்டித்து செய்திகள், தகவல்கள் வெளியிடுவது எப்படி சரியாகும்? நீங்களாக சமூக ஊடகங்களை மட்டுமே நம்பி செய்திகளை, குறிப்புக்களை, அறிக்கைகளை வெளியிடுகின்றீர்கள்.

உரிய அதிகாரிகளோடு விடயங்களை உறுதிப்படுத்தாமல் நீங்கள் வெளியிடும் கருத்துக்களால் இலங்கை பற்றி சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டுள்ளன. உங்களில் பலரினதும் நடவடிக்கைகள் தொடர்பாக நான் அதிகம் அதிருப்தியுற்றிருக்கின்றேன். இப்படியான ஆக்கிரமிப்பு வொஷிங்டனில் நடந்தால் அதை உங்கள் நாடு அனுமதிக்குமா? உங்கள் நாட்டின் சரித்திரத்தை ஆபிரகாம் லிங்கனிலிருந்து படித்துக்கொண்டு வாருங்கள்.

மேலும், போராட்டக்காரரர்கள் ஜனாதிபதி செயலகத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருக்கின்றார்கள். இது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அவர்களுக்கு கையளிக்க சென்றபோது அவர்கள் மிக மோசமாக நடந்து கொண்டார்கள். வேறு வழி இல்லாததால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது”என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.