கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் சுற்றிவளைப்பு!!
(முல்லைத்தீவு நிருபர்)
முல்லைத்தீவு - விசுவமடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள நெத்தலியாறு ஆற்றங்கரையோரப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இன்று (18) மதியம் 12.30 மணியளவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு அங்கிருந்த பெருமளவான கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள் என்பன பொலிசாரால் கைப்பேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மேற்படி விசுவமடு பகுதியில் உள்ள நெத்தலி ஆறு ஆற்றங்கரையோர பகுதியில் சமூக விரோதிகளால் திருட்டுத்தனமாக கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயக்கப்பட்டு வருவதாக பொது மக்களால் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு உடனடியாக விரைந்த புதுக்குடியிருப்பு போலீசார் மக்களின் பங்களிப்புடன் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்டனர்.
இதன்போது 50 லீற்றருக்கு மேற்பட்ட கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் 8 பீப்பாக்கள் மற்றும் உபகரணங்கள் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். மேலும் 3 பீப்பாய்களில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு காச்சுவதற்கான பதப்படுத்தப்பட்ட கலவை (கோடா) பொலிசாரால் சம்பவ இடத்தில் வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுப்படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.




