தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்!
COVID – 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் பொதுமக்கள் ஒன்றுகூடும் சமய நிகழ்வுகளை மட்டுப்படுத்துமாறு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையன்று ஆலயங்களின் உள்ளேயோ வௌியிலோ அல்லது ஏனைய இடங்களிலோ ஒன்றுகூடுதல், சன நெரிசலான நிகழ்வுகளை நடத்துதல் என்பன அவதானத்துக்குரிய விடயங்களென திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தவிர்ப்பதுடன் ஆலயத்தினுள் ஒரே நேரத்தில் வழிபடக்கூடிய பக்தர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 05 ஆக வரையறுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறு அனைத்து ஆலய நிர்வாகத்தினரிடமும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

