மன்னாரில் நால்வருக்கு Covid-19 தொற்று உறுதி
(மன்னார் நிருபர்)
மன்னாரில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மெலும் தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் 3 பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள சவேரியார் புரத்தில் மீன் வாடி அமைத்து கடற்தொழிலில் ஈடுபட சிலாபத்தில் இருந்து வந்தவர்கள்.
இவர்கள் கடந்த 19 ஆம் திகதி சிலாபத்தில் இருந்து வருகை தந்து வரையாறுக்கப்பட்ட நகர்வு என்ற அடிப்படையில் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் கடலுக்குச் செல்லவும்,சமூகத்திற்குள் செல்லாமல் இருக்கவும் அனுமதிக்கப்பட்டு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
வருகை தந்தவர்களில் 6 பேரூக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்பாக இருந்த , அடிப்படை உதவிகளை மேற்கொண்ட 15 உள்ளூர் வாசிகள் உள்ளடங்களாக 18 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
நான்காவது தொற்று உடையவர் இரணை இலுப்பைக்குளம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 21 ஆம் திகதி, கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு பேரூந்து மூலம் வருகை தந்து வவுனியாவில் இருந்து முச்சக்கர வண்டியூடாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதிக்கு வருகை தந்துள்ளார்.
இவரும் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 26 ஆம் திகதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவருடன் தொடர்பில் இருந்த 5 பேர் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 1286 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு குறித்த 4 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது வரையில் மன்னார் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 423 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 16 பேர் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
