பயணக்கட்டுப்பாடு அமுல் : முடங்கியது வாழைச்சேனை, ஓட்டமாவடி
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதுடன், எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 25ம் திகதி அதிகாலை 4 மணி முதல் அன்றிரவு 11 மணி வரையில் நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டு, அன்றிரவு 11 மணி முதல் 28ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் நடைமுறைக்கு வருமெனவும் அறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி, கல்குடா பிரதேசத்திலுள்ள வியாபார நிலையங்கள் மூடிக்காணப்படுவதுடன், ஓரிரு மருந்தகங்கள் மாத்திரம் திறந்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருவதுடன், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் பயணிப்பதைக் காண முடிவதுடன், பிரதேசங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
நகர்ப்பகுதிகளில் ஒரு சிலர் நடமாடுவதைக் காணக்கூடியதாகவுள்ளதுடன், பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தால் நோயாளிகள் வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

