காணாமல் போன வாழைச்சேனை இயந்திரப்படகினை இதுவரை கண்டுபிடிக்கவில்லை - மூவர் மாத்திரம் கரை திரும்பினார்...
வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடந்த 02ம் திகதி ஆழ்கடலுக்குச் சென்ற மீன்பிடி இயந்திரப்படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், சென்றவர்கள் மூவர் மாத்திரம் திரும்பியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திலிருந்து வாழைச்சேனையைச் சேர்ந்த அஜ்வத் முகம்மது சபா என்பருக்குச் சொந்தமான IMULA0039MTR எனும் இலக்கமுடைய மஞ்சள் நிற அலீயா என பெயர் இடப்பட்ட மீன்பிடி இயந்திரப்படகுடன், வாழைச்சேனை மற்றும் பிறைந்துறையைச்சேர்ந்த மூன்று மீனவத்தொழிலாளர்களுடன் வாரத்துக்கு தரித்து மீன் பிடிக்க கடந்த 02ம் திகதி ஆழ்கடலுக்குச் சென்றனர்.
ஆனால், கடந்த 09ம் திகதி அதிகாலையில் படகின் இயந்திர கோளாறு காரணமாகவும், அவ்வேளை நிலவிய கடல் கொந்தழிப்பினாலும் ஊர் செல்வதற்கு வருகை தந்த ஒரு படகின் உதவியுடன் படகினை எடுத்து வர முயற்சித்தும் பயனளிக்காமையினால் மீனவத்தொழிலாளர்கள் மூவரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வாழைச்சேனைக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், மீன்பிடி இயந்திரப்படகும் அதன் மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களும் கடல் நீர் அடித்துச் சென்றுடுள்ளதுடன், இதனைத்தேடும் பணியில் ஈடுபட்டும் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பில் படகு உரிமையாளரினால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, குறித்த படகினை யாரும் மீனவர்கள் கண்டு கொண்டால் உடனடியாக படகின் உரிமையாளரான வாழைச்சேனையைச்சேர்ந்த அஜ்வத் முகம்மதுசபா என்பவரின் 0770556385 அல்லது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் 0652257709 என்ற இலக்கத்துக்கு அறியத் தருமாறு வாழைச்சேனை பொலிஸார் வேண்டுகோள் விடுத்தார்.