பன்குள மக்களின் பூர்வீக நிலங்களை மீட்டு தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
திருகோணமலை மொரவெவ பன்குளம் 4-ஆம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை தமக்கு மீட்டுத் தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
1983 ஆம் ஆண்டு தமது சொந்த காணிகளை விட்டு சென்று இந்தியாவிலும் அகதி முகாம்களிலும் வாழ்ந்து வந்ததாகவும் தற்போது தங்களுடைய காணிகளுக்குள் செல்லவிடாமல் தடுப்பதாகவம் தமக்குரிய காணிகளை அரச அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டும் எனக் கோரியும் இன்று (29) காலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாலாம் வாய்க்கால் பகுதியில் 83 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் காணிகள் யுத்த காலத்தின் போது கைவிடப்பட்டு வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் தற்போது தமது பூர்வீக காணிகளில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தமக்கு உரிய ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும் மொரவெவ பிரதேச செயலக அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் தமிழ் மக்களுக்குரிய காணிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இருந்தபோதிலும் குறித்த காணிகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டி கோரல விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதிக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதாகவும் இதன்போது வாக்குறுதி அளித்தார்.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வரும் முன்னர் இப்பிரதேசத்தில் வாக்கு சேகரிப்புக்கு வந்தபோது இப் பிரதேசத்தில் வசிக்கும் அனைவரினதும் இடத்திற்கான உறுதிப்பத்திரங்களை பெற்று தருவதாகவும் தற்போது ஆட்சி பீடம் ஏறிய பின்னர் இவ்வாறு பிரதேச மக்களை ஏமாற்றுவது கவலைக்குரிய விடயம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூச்சலிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரின் புகைப்படங்களை ஏந்திய பதாகைகளுடன் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.