விமானப்படை வரலாற்றில் புதிய தடம் பதித்து ஒரே தடவையில் 153 அதிகாரிகள் பயிற்சிகளைப் பூர்த்தி...
“திறமைகளை மேம்படுத்திக்கொண்டு தொழில் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லுங்கள்…”
புதிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு....
திறமைகளை மேம்படுத்திக்கொண்டு, தொழில் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதே இளம் அதிகாரிகளின் கடமையாகக் காணப்படுகிறது என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற விமானப் படை அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அறிவை மேம்படுத்திக்கொள்ள, தொடர்ச்சியான திறன் மேம்பாடு மற்றும் அனுபவத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்குக் கடினமாக உழைக்க வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் இதன்போது தொடர்ந்துரைக்கையில் குறிப்பிட்டார். சுமார் 70 வருடங்களுக்கும் மேலாக விமானப் படையினரால் தாய் நாட்டுக்காகச் செய்யப்பட்ட சேவைகள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல், தேசிய பாதுகாப்பை மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கு, ஜனாதிபதி அவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இராணுவத்தின் தொழில்நுட்பக் கரமாக விமானப் படையின் முழுத் திறனும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு, விமானப்படை அதிகாரிகளின் தொழில் திறமைகள், அதிநவீன தொழில்நுட்பத்துடன் முழுமையாக்கப்படல் வேண்டும். அதிகாரிகளின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தின் மதிப்பு தொடர்பில் எடுத்துக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதுவே உரிய அதிகாரிகளின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள மற்ற அணிகளின் உண்மையான அக்கறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். நல்வாழ்வு மற்றும் வெற்றிக்காக, உண்மையான அர்ப்பணிப்புகளுடன், முடிந்த அனைத்தையும் அதிகாரிகளுக்காக முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
06 பாடநெறிகளின் கீழ், மூன்றரை முதல் நான்கரை வருடக் காலப்பகுதிக்குள் பயிற்சிகளை நிறைவு செய்த கெடெட் அதிகாரிகள் 153 பேர், இன்றைய தினம் கலைந்து சென்றனர். விமானப்படை வரலாற்றில், அதிகப்படியான அதிகாரிகள் ஒரே தடவையில் பயிற்சிகளை நிறைவுசெய்தமை இதுவே முதல் தடவையாகும். விமானப் படையின் விமானி கெடெட் அதிகாரிகள் இருபது பேர் மற்றும் பெண் விமானி கெடெட் அதிகாரிகள் அறுவருக்கு, ஜனாதிபதி அவர்களினால் உத்தியோகபூர்வ இலச்சினை அணிவிக்கப்பட்டது. அனைத்துப் பயிற்சிகளின் போதும் விசேட திறமை காட்டிய கெடெட் அதிகாரிகள் 14 பேருக்கு, ஜனாதிபதி அவர்களினால் விருதுகள் வழங்கப்பட்டன.
விமானப்படை இசைக் குழுவினால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியையும் கேட்டு மகிழ்ந்த ஜனாதிபதி அவர்கள், பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் அதிகாரிகளுடன் குழு புகைப்படத்துக்கும் தோற்றினார். விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண அவர்களால், ஜனாதிபதி அவர்களின் விஜயத்தைக் கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னமொன்று கையளிக்கப்பட்டது. விமானப்படை முகாமில் வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்தில், ஜனாதிபதி அவர்களினால் குறிப்பொன்றும் எழுதப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண, விமானப்படை பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள், அதிகாரிகள், புதிய அதிகாரிகளின் உறவினர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.